Sai Prem
This podcast is dedicated to our spiritual Master sharing His universal teachings of Truth, Love, Right Conduct, Peace and Non violence through human value and moral stories . Stories connect with any age group people. Profound messages can be conveyed through simple stories. This is our humble attempt to spread these values through stories and experiences sharing. These are collection of stories from various resources which are collated in our blog Saibalsanskaar. (http://saibalsanskaar.wordpress.com) Most of the stories will be in English and from time to time we will be sharing in other Indian languages as well. Looking forward to all your support.
Sai Prem
Tamil Story- கடவுளை சந்திப்பது
Human value story in Tamil on seeing God
http://saibalsanskaar.wordpress.com
இந்த உலகில் நாம் நம் கண் முன்னால் காணும் ஒவ்வொருவரையும் நேசிக்க இயலவில்லை என்றால் கண்ணுக்குத் தென்படாத கடவுளிடம் எவ்வாறு அன்பை செலுத்த இயலும் – அன்னை தெரேசா
நீதி – அன்பு / வாய்மை
உபநீதி – அக்கறை / தெய்வீகத் தன்மை
ஒரு சிறுவனுக்கு கடவுளைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாக இருந்தது. கடவுள் வெகு தூரத்தில் இருப்பதாகக் கற்பனை செய்து, பயணத்திற்குத் தயாராகி, சிற்றுண்டி வகைகளும் குளிர் பானங்களும் ஒரு பெட்டியில் எடுத்துக் கொண்டு, அவன் பயணத்தைத் தொடங்கினான்.
சிறிது நேரம் நடந்த பிறகு அவன் கண்ட காட்சி – ஓர் அழகிய பூங்காவில் ஒரு வயதான பெண்மணி. அவள் அங்கு இருக்கும் புறாக்களை உட்கார்ந்தவாறு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் அருகில் சென்று சிறுவன் அமர்ந்து, தன் பெட்டியைத் திறந்தான். அதிலிருந்து குளிர் பானத்தை எடுத்த போது, வயதானவள் பசியோடு உட்கார்ந்திருப்பதைக் கவனித்து சிற்றுண்டியை அவளிடம் கொடுத்தான். நன்றியோடு அவனைப் பார்த்தாள். ஒரு புன்சிரிப்பும் அவள் முகத்தில் தெரிந்தது.
அவளுடைய புன்சிரிப்பு அவ்வளவு அழகாக இருந்ததால், அதை மீண்டும் பார்க்க சிறுவன் ஆசைப்பட்டு, அவனிடம் இருந்த குளிர் பானத்தையும் அவளிடம் நீட்டினான். அதே புன்சிரிப்பு முகத்தில் மீண்டும் தெரிந்தது. அளவில்லா மகிழ்ச்சியை அவன் அனுபவித்தான்.
பகல் முழுவதும் இருவருமே பேசிக் கொள்ளவில்லை. ஆனால் ஒரு புன்சிரிப்போடு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தார்கள். மாலைப் பொழுதில் வெளிச்சம் மறைந்து இரவு நேரம் ஆரம்பமாகி விட்டது. சிறுவனுக்குக் கொஞ்சம் சோர்வாக இருந்தது. அவன் வீட்டிற்குச் செல்ல புறப்பட்டு சில அடிகள் எடுத்து வைத்தான். பிறகு திரும்பிச் சென்று அந்த வயதானவளை அணைத்துக் கொண்டான். அவள் கடைசியாக சிரித்த அந்தப் புன்சிரிப்பு மிகவும் அற்புதமாக இருந்தது.
வீட்டிற்குச் சென்றவுடன் அவன் முகத்தில் இருந்த சந்தோஷத்தைப் பார்த்து அவன் தாயார், “இன்றைக்கு என்ன நடந்தது? இவ்வளவு சந்தோஷமாக இருக்கிறாயே?” எனக் கேட்டாள். அதற்கு சிறுவன், “நான் கடவுளுடன் சேர்ந்து உணவு உண்டேன்” என்று கூறினான்.
அவன் தாயார் பதில் சொல்வதற்குள் சிறுவன் தாயாரிடம், “என்னவென்று தெரியுமா?? இவ்வளவு அழகான ஒரு புன்சிரிப்பை நான் பார்த்ததே இல்லை” என்று கூறினான். அதே சமயத்தில், அந்த வயதான பெண்மணி வீட்டிற்குச் சென்றவுடன் அவளின் அமைதியான முகத்தைப் பார்த்து மகன் ஆச்சரியப்பட்டான். அவன் விசாரித்த போது அவள் “இன்றைக்கு நான் கடவுளைப் பார்த்தேன். எனக்கு சிற்றுண்டி கொடுத்ததோடு ஒரு புன்சிரிப்பும் அவன் முகத்தில் தெரிந்தது; ஆனால் கடவுள் ஒரு சிறுவனாக காட்சியளித்தார்.” என்று கூறினாள்.
நீதி:
பல சமயங்களில் ஒரு அன்பான வார்த்தை, மற்றவர்களைப் புகழ்ந்து பேசுவது அல்லது செயல்முறையில் ஆதரவாக நடந்து கொள்வது போன்ற சிலவற்றை நாம் புரிந்து கொள்வதில்லை. ஒவ்வொருவரும் நம் வாழ்க்கையில் ஒரு காரணத்திற்காகவே வருகின்றார்கள். நாம் அன்பாக இருந்தால் எதையும் வெல்லலாம்.
மொழி பெயர்ப்பு:
சரஸ்வதி, ரஞ்சனி